நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட மருத்துவ ஆணைய மசோதா.. டாக்டர்கள் போராட்டம் வாபஸ்
எம்.பிகளின் வலியுறுத்தலை தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு தேசிய மருத்துவ கமிஷன் மசோதா அனுப்பி வைக்கப்பட்டதால் மருத்துவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
Recommended Video

சென்னை: மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா 2017-க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சுகாதார துறை அமைச்சர் ஜே.பி நட்டா தாக்கல் செய்துள்ள இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

யுனானி, ஹோமியோபதி, சித்தா போன்ற மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்களை 'பிரிட்ஜ்' எனும் குறுகிய கால படிப்பு மூலம் அல்லோபதி மருத்துவர்களாக அங்கீகரிப்பது, இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு அதற்கு பதிலாக புதிதாக 4 நிர்வாக குழுக்களை அமைப்பது, தனியார் மருத்துவ கல்லூரிகளை மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதிப்பது போன்ற அம்சங்கள் இந்த மசோதாவில் அடங்கி உள்ளன.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மருத்துவ துறை மிகுந்த நெருக்கடி மற்றும் குழப்பத்திற்கு ஆளாகும் என கூறி இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுப்பிவைத்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications