தவறான பிரசாரங்கள், வதந்திகளா.. இந்த எண்ணுக்கு போன் செய்து தெளிவு பெறலாம்
சென்னை: சமூக வலைதளங்களில் பரவும் தவறான பிரசாரங்கள், வதந்திகள் குறித்து தெளிவு பெறும் வகையில், "குதாய் கித்மத்கர்' அமைப்பின் சார்பில் கட்டணமில்லா செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. ஆதாரமில்லாத பல விஷயங்களைக் கூட சமூக வலைதளங்கள் மூலம் எளிதாக பரப்பிவிட முடிகிறது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விஷமிகள் சிலர், சமூகத்தில் கலவரத்தை உருவாக்கும் தகவல்களைப் பரப்பி விடுகின்றனர்.
அதன் உண்மைத்தன்மையை சோதிக்காமலேயே மக்களும் அதனை சமூகவலைதளங்களில் அடுத்தவர்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
இவ்வாறு தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் குறித்து தெளிவு பெறும் வகையில் இலவச செல்போன் எண்ணை வழங்கியுள்ளது குதாய் கித்மத்கர் அமைப்பு. கட்டணமில்லாத இந்த 9718072586 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தவறான பிரசாரங்கள், வதந்திகள் குறித்து தெளிவு பெறலாம்.
இந்நிகழ்ச்சியில் கலந்து சேவையைத் தொடக்கி வைத்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன். அப்போது அவர் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் சமூகத்தில் அமைதியைக் கெடுக்கும் வகையிலும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் திட்டமிட்டு தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற கட்டணமில்லா செல்லிடப்பேசி சேவையின் மூலம் மக்கள் தெளிவு பெற முடியும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் மதப் பிரச்னைகளைக் காட்டிலும், சாதியப் பிரச்னைகளே அதிகம் நடைபெறுகின்றன. இங்கு மதவாதிகளுக்கு வலு குறைவு, சாதியவாதிகளுக்கே வலு அதிகம்.
மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவதற்காகவே மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்த இயக்கம் மக்கள் நலன் சார்ந்து செயல்படும். இந்தக் கூட்டியக்கத்தில் உள்ள கட்சிகளுடன் இதுவரை கூட்டணி கிடையாது. தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என்றார்.