நாளைக்கும் லீவு..?.. ஏக்கத்தில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாணவர்கள்.. குழப்பத்தில் பெற்றோர்!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்குமா என்பது குறித்து அந்த மாவட்டங்களின் தாய்மார்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னை: சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா என்பது குறித்து அந்த மாவட்டங்களின் தாய்மார்கள் குழப்பத்தில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 30-ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் முட்டி அளவுக்கு வெள்ள நீர் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் பள்ளிகளிலும், சமூக நல கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெயில் எட்டி பார்த்தது
சென்னையில் மழை நேற்றிரவு மாலையுடன் ஓய்ந்தது. இன்று காலை முதல் வெயில் எட்டி பார்த்து வந்தது. எனினும் வானம் திறந்து திறந்து மூடுகிறது. இதனால் மக்கள் துவைத்த துணிகளை காயபோடுவதும், எடுப்பதுமாக உள்ளனர்.
எண்ணூர் பகுதியில் மழை
இந்நிலையில் எண்ணூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சில பகுதிகளில் வெயிலிலிருந்து கிளைமேட் மாறி வருகிறது. இந்நிலையில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
இந்நிலையில் நாளை மறுநாள் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தை பொருத்த மட்டில் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருவதால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழப்பம்
இதுபோல் சூழ்நிலை நிலவுவதாலும், வானிலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதாலும் நாளை பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மாணவர்களை காட்டிலும் தாய்மார்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசிடம் தெளிவான முடிவையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.