வெள்ளப்பெருக்கு எதிரொலி.. தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!
வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இங்கு ஓடும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். வறட்சியின் காரணமாக மூடப்பட்டிருந்த தலையணை கடந்த செப் 2ம் தேதி திறக்கப்பட்டது.
இதையடுத்து தலையணையில் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர். இந்நிலையில் அதிகாலை முதல் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் அருவிகள் மற்றும் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தலையணையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை மூழ்கியப்படி கற்றாற்று வெள்ளம் பாய்ந்து செல்வதால் பாதுகாப்பு கருதி தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் கயிறு கட்டி ஆற்றில் தடுப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் தலையணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் தடையை மீறி ஆற்றில் இறங்கி விடாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications