ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெ. மரணத்திற்கு நீதி விசாரணை கேட்கலையே.. ஏன்? - டி.ஆர்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணைக் கேட்கும் ஓ.பன்னீர் செல்வம், அவர் முதல்வராக இருந்த போது கேட்கத் தவறியது ஏன் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலம் கடந்து நீதி விசாரணை கேட்பதாக லட்சிய திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். அவர் முதல்வராக இருந்த போது நீதி விசாரணைக் கேட்காதது ஏன் என்றும் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ஜெயலலிதா மரணம் பற்றி இப்போது வாய் திறக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இத்தனை நாட்கள் மவுனம் காப்பது ஏன் என்று கேட்டுள்ளார்.
ஓபிஎஸ் அணியினரைப் பார்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள டி.ராஜேந்தர், இப்போது உண்ணாவிரதம் இருப்பது ஏன் என்று கேட்டுள்ளார்.

ஓபிஎஸ் அமைதி
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அமைதியாக இருந்தது ஏன்? இப்போது திடீர் என்று மவுனம் கலைந்தது ஏன்?

நீதி விசாரணை கேட்கலையே
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நீதி விசாரணை ஏன் கேட்கவில்லை. காலம் கடந்து பன்னீர்செல்வம் நீதிவிசாரணை கேட்பது ஏன்? காலம் கடந்து ஞானம் வந்து விட்டதா என்றும் கேட்டுள்ளார்.

வாலை பிடிப்பதா?
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதும் 60 நாட்கள் முதல்வராக இருந்த போது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒ.பன்னீர் செல்வம், இப்போது ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்பது தும்பை விட்டு வாலை பிடிப்பது போல உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சூரிய நமஸ்காரம்
தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம், இது எந்த சூரியனுக்கான காரிய நமஸ்காரம் என்றும் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications