மின்கட்டண உயர்வை ரத்து செய்ய திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் முதல்வருக்கு கடிதம்!
திருப்பூர்: மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கமான டீமாவின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள மின்கட்டண உயர்வு என்பது பின்னலாடை உற்பத்தித் தொழிலுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
நூல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த திருப்பூர் தொழில்துறை தற்போது சீராக நடைபெற்ருக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்த மின்கட்டண உயர்வு தொழில்துறையினருக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.
அபரிதமான இந்த மின் கட்டண உயர்வால் பின்னலாடைத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வை அறிவித்து, அமல்படுத்துவதை பின்னலாடைத் தொழில்துறையினர் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். இதனால் பின்னலாடை உற்பத்தி கடுமையாக பாதிக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். பின்னலாடைத் தொழில் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
எனவே, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications