கர்நாடகாவை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் – தமிழக வணிகர் சங்கம் கோரிக்கை
சென்னை: காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் "காவிரி நீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை திட்டமிட்டு கர்நாடக அரசு பறித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தையோ நடுவர் நீதிமன்றத்தையோ மதிக்காமல் அடாவடித்தனம் செய்கிறது கர்நாடகம். இதனால் தேசிய ஒருமைப்பாடு சீர்குலைந்துவிடும் என்பது தெரிந்திருந்தும் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.
இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவு தந்திருக்கிறது. இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை என்று பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.
எனவே மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டை காக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும். நியாயத்தை உணராமல் கர்நாடகம் அடாவடித்தனம் செய்தால் கர்நாடக அரசை உடனடியாக கலைக்க வேண்டும்.
அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். புதிதாக கட்டப்பட்ட அனைத்து அணைகளையும் ராணுவ நடவடிக்கையின் மூலமாக இடித்து தரைமட்டமாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications