பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம்... ஏரிகளில் உடைந்து வெளியேறும் வெள்ளம் நீர்- தவிக்கும் மக்கள்
சென்னை: ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் மழை வெள்ளத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் ஊருக்கு புகுந்துள்ளன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கவரப்பாளையத்தில் உள்ள ஏரி உடைந்தது. வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னை-திருவள்ளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தூசிவாகை ஏரி உடைந்தது. இதன்காரணமாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று இரவு 7 மணிமுதல் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. சில ஏரிகள் உடைந்து ஊருக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

எட்டு ஏரிகள் உடைப்பு
உளுந்தூர்பேட்டை தாலுகாவில் தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கனமழையால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மட்டிகை, மதியனூர், கூ.கள்ளக்குறிச்சி, வெள்ளையூர், அங்கனூர், பு.கொணலவாடி உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன.

குடிசைகள் சேதம்
திருநாவலூர், ஆவலம், பரிக்கல், பரவனந்தல், சோமாசிப்பாளையம், மேட்டத்தூர், செஞ்சிக்குப்பம், கிழக்குமருதூர் உள்ளிட்ட ஏரிகள், நேற்று காலை முதல் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடிசை பகுதிக்குள் புகுந்தது. இதனால் கிராம மக்கள் பொது இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரும்பு, நெல் சேதம்
பரிக்கல் கிராம ஏரி உடைப்பினை அடைக்க கிராம மக்கள் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனால் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெல், உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் தண்ணீரில் மூழ்கியது.

வாழை மரங்கள் சேதம்
கருவேப்பிலைப்பாளையம் பகுதியில் ஞானமூர்த்திக்கு சொந்தமான 3 ஏக்கர் வாழை மரங்கள், மழையால் சேதமடைந்துள்ளன. அதே போல் நைனாகுப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், முத்துவேல், ராமர், முருகவேல், ஐயனார், ராமகிருஷ்ணன், முத்துலிங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரின் மக்காசோள பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், செங்குறிச்சி பெரிய ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்கல் உடைப்பு ஏற்பட்டதால் செங்குறிச்சியைச் சேர்ந்த விவசாயிகளின் 300 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

10 கிராமங்கள் துண்டிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சுகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வழூர் - மருதாடு பகுதியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கிடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அலட்சியம்
ஏரிகள், குளங்களை சீரமைக்காத காரணத்தினாலேயே மழை வெள்ளத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏரிகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவதாகவும், இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, விளைநிலங்களும் பாழாவதோடு, பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications