ஜெ.வை மிஞ்சிய எடப்பாடியார்... கட்அவுட்... போக்குவரத்து மாற்றத்தால் தருமபுரியில் மக்கள் அவதி
தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவுள்ள நிலையில் அங்கு போலீஸார் போக்குவரத்துகளை மாற்றம் செய்துள்ளனர்.
தருமபுரி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக காவல் துறையினர் போக்குவரத்துகளை மாற்றம் செய்துள்ளதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு முடியும் வரை கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி ஆங்காங்கே நடைபெறும் நூற்றாண்டு விழா கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என கலந்து கொண்டு வருகின்றனர்.
முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் கூட்டம் சேர வேண்டும் என்பதற்காக பள்ளஇ மாணவர்களை அழைத்து கொண்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.

தடை விதிப்பு
பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத காரணத்தினால் அவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் சீருடை அணிவிக்கப்படாமல் சில மாணவர்கள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதற்காக தருமபுரி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வாகனங்கள் உள்ளே வரக் கூடாது என்பதற்காக போலீஸார் ஆங்காங்கே தடுப்புகளை வைத்துள்ளனர்.

மக்கள் அவதி
சேலத்திலிருந்து தருமபுரி வரும் வாகனங்கள் தடங்கள், காமதேனு கல்லூரிசாலையாக வரவும் நான்கு ரோடு, பழைய தருமபுரி வழியாக வாகனங்கள் வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வருக்காக பெரிய பெரிய கட்அவுட்களை வைத்துள்ளதால் சாலையையே மறைக்கும் அளவுக்கு உள்ளது.

அலுவலகம் செல்வோர் அவதி
பொதுவாக தனியார் பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்கும். ஆனால் இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டதால் தனியார் பள்ளிகள் சனிக்கிழமை விடுமுறை அளித்துவிட்டன. எனினும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், அவசர பணிக்காக செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போலீஸாரும் மிகவும் கெடுபிடி காண்பித்து வருகின்றனர்.

8000 போலீஸார்
ஜெயலலிதா இருந்தபோது அவர் ஒரு குறிப்பிட்ட சாலையை கடப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன்னதாக போக்குவரத்து தடை செய்யப்படும். அதுபோல் எடப்பாடியார் கலந்து கொள்ளும் விழாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் முணுமுணுத்தனர். இந்த விழாவிற்காக 8 மாவட்டங்களில் இருந்து 3,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மறைந்தாலும் அவர் பொதுமக்களுக்கு இன்னல்களை தரும் அளவுக்கு அவர் கடைபிடித்து வந்த பாணியை இன்றைய ஆட்சியாளர்களும் தொடர்வது வேதனை அளிப்பதாக பெரும்பாலான மக்கள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications