சென்னை சில்க்ஸ் தீ விபத்து எதிரொலி.. தி. நகரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் துணிக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாலை 5 மணி முதல் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிடத்தின் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாத அளவு தீ தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. துணிக்கடை என்பதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து எரிந்து வரும் தீயால் அந்தப் பகுதி கடுமையான புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கட்டிடத்தின் முதல் தளம் முதல் 6 வது தளம் வரை ஓரளவுக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை இயக்குநர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
85 சதவீத தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 7வது தளத்தில் மட்டும் அதிகளவு தீ எரிந்து வருகிறது அதை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.நகர் உஸ்மான் சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அசோக் நகர், மேற்கு மாம்பலம் வழியாக செல்லும் வாகனங்கள் ஆர்ய கவுடா சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணியர் சாலை, வெங்கட் நாராயண சாலையை பயன்படுத்தவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பர்கிட் மேட்லி சாலையை பயன்படுத்தி செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.