கும்பல் கும்பலாக கள்ள ஓட்டுப் போடுகின்றனர்... இது தேர்தலா... டிராபிக் கொந்தளிப்பு
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் கார் மீது தண்டையார் பேட்டை அருகே அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்று டிராபிக் ராமசாமி காரில் சென்று பார்வையிட்டு வருகிறார். தண்டையார்பேட்டையில் டிராபிக் ராமசாமி சென்ற கார் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். காரைவிட்டு வெளியில் வந்த டிராபிக் ராமசாமியிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், சமாதானம் செய்து டிராபிக் ராமசாமியை அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்டையாளர் பேட்டையில் 156, 157 பூத்துக்கள் புதிதாக போட்டார்களாம். எந்த அறிவிப்பும் இல்லை. 100 மீட்டருக்குள் அதிமுகவினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். பூத்துக்கு எதிரிலேயே ஒரு வேன் நிற்கிறது. அதனை போட்டோ எடுத்திருக்கிறேன். நான் இன்ஸ்பெக்டரிடம் சொன்னேன். அவர் அந்த வண்டியை எடுக்க முடியாது என்றார். நான் சட்டம் தெரியுமா. 100 மீட்டருக்குள் எதுவும் இருக்கக் கூடாது என்றேன். அதற்கு அவர் ஆமாம் என கூறிவிட்டு சென்றார்.
நான் அந்த இடத்தைவிட்டு 50 அடி தூரம் வந்தபோது ஒரு கும்பல் எனது காரை தாக்கியது. பின்னால் இருந்த இஸ்பெக்டர் போங்க போங்க என்று என்னை விரட்டுகிறார். என்னை விரட்டுகிறார்களே, அதிமுகவினருக்கு அங்கு என்ன வேலை. ஓட்டுப்போட வந்தால் ஒட்டு போட்டுவிட்டு சென்றுவிட வேண்டும்.
இந்த தேர்தலின் வெற்றி வாய்ப்பை அறிவிக்கக் கூடாது என்ற மனுவை நாளை காலை மனுவாக கொடுக்கப் போகிறேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடு நடைபெறுகிறது. போலீசாரிடம் புகார் அளிக்க சென்றால் என்னை அனுப்புவதில் குறியாக உள்ளனர்.
நான் 15 வாக்குச்சாவடிகளை பார்த்தேன். 174, 175, 176, 177, 178ல் உள்ளுக்குள் காவல்துறையே கிடையாது. துணை ராணுவம், போலீசார் ரோட்டில் நின்றுள்ளனர். வாக்குச்சாவடியில் ஊழியர்கள் பயப்படுகின்றனர். கும்பல் கும்பலாக ஆளும் கட்சியினர் உள்ளே செல்கின்றனர். என் கார் உள்ளே போகும்போது இன்ஸ்பெக்டர் தடுக்கிறார். ஆனால் ஆளும் கட்சியினர் கும்பல் கும்பலாக உள்ளே செல்கின்றனர். இந்த தேர்தல் செல்லாது என்று வழக்கு போட்டுள்ளேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications