வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு திருச்சி கமிஷனரை மாற்றக் கோரிய டிராபிக் ராமசாமி!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிட பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் திருச்சி போலீஸ் கமிஷனரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமியிடம் தான் மனு கொடுத்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும் ராமசாமி கூறியுள்ளர்.
வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் போட்டியிடுகிறேன். ஸ்ரீரங்கத்தில் அடிப்படை பிரச்சனையான அடிமனை பிரச்சனை குறித்து மக்களிடம் பேசி அவர்களி்டம் வாக்கு சேகரிப்பேன்.
தமிழக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்கிற உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் தொகுதி எனக்கு அறிமுகமான தொகுதி மட்டும் இல்லாமல் நான் தமிழகம் முழுவதும் நன்கு அறிமுகமான நபர் என்பதாலும் போட்டியிடுகிறேன்
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் 3 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து திருச்சியில் நீடிப்பதால் ஸ்ரீரங்கத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. அவரை 48 மணிநேரத்தில் மாற்ற வேண்டும். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.சி.பழனிசாமியிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம் என்றார் ராமசாமி.