ஜெ. பேனர்.. நடு ரோட்டில் படுத்து 'டிராபிக்'கை ஸ்தம்பிக்க வைத்த ராமசாமி.. பணிந்தது போலீஸ்!
சென்னை: சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனர்களை அகற்றக் கோரி நடு ரோட்டில் படுத்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. அவரை சமாதானப்படுத்த முயன்று தோல்வி அடைந்த போலீஸார், வேறு வழியில்லாமல், பேனர்களை அகற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நேற்று கடற்கரை காமராஜர் சாலை முழுவதும் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. முதல்வர் ஜெயலலிதாவின் பேனர்கள் இவை. அதிமுகவினர் இதை வைத்திருந்தனர். ஆனால் முறையான அனுமதி பெறாமல் இவை வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அங்கு வந்தார் டிராபிக் ராமசாமி. சாலையில் திடீரென படுத்தார். உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இப்படியே படுத்திருப்பேன் என்று கூறி விட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஆனால் அவர் சமாதானமாகவில்லை.
வாகனங்கள் சாலையில் தேங்க ஆரம்பித்தன. இதைப் பார்த்த போலீஸார் வேறு வழியில்லாமல் பேனர்களை அகற்ற ஆட்களை வரவைத்தனர். அவர்கள் வந்து பேனர்களை அகற்றினர். அதன் பின்னரே ரோட்டிலிருந்து எழுந்து சென்றார் டிராபிக் ராமசாமி.
பேனர்கள் அகற்ற்பபடுவதை சாலையில் உட்கார்ந்தபடி அவர் கண்காணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications