தண்டவாளத்தில் போராட்டம்.. துடித்த கர்ப்பிணி... ரிவர்ஸில் போன ரயில்.. சபாஷ் அதிகாரிகள்!
திருவாரூர்: திருவாரூரில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தின்போது ரயிலில் பிரவச வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணின் நிலையைப் பார்த்த ரயில்வே அதிகாரிகள் அந்த ரயிலை பின்னோக்கி நகர்த்திச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து அப்பெண்ணைக் காப்பாற்றினர்.
ரயில்வே அதிகாரிகளின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுக்களைக் குவித்து விட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருவாரூர் மாவட்டம் திருமதி குன்னம் என்ற இடத்தில் இன்று காலை காரைக்காலில் இருந்து திருச்சி சென்ற ரயிலை மறித்து அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ரயிலில் பயணம் செய்த தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்த ஜெயக்கொடி என்ற நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
வலியால் துடித்த அவரை மருத்துவமனையில் பத்திரமாக சேர்க்க ரயில்வே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். உடனடியாக அந்த ரயிலை 5 கி.மீ. தூரத்திற்கு பின்னோக்கி இயக்கி புளிக்கரை ரயில் நிலையத்தை அடைந்தனர். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்மபெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பெண் இயல்பு நிலையை அடைந்தார்.
ரயில்வே அதிகாரிகளின் இந்த மனித நேயசெயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுக்களைக் குவித்து விட்டது.