தேமுதிகவில் எல்.எல்.ஏ சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்த திருநங்கை
சென்னை: சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படுகிறது. கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை மனு கொடுத்தார்.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க, சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.,வில், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இதுவரை விருப்ப மனு அளித்துள்ளனர். தி.மு.க.,வில், 5 ஆயிரம் பேர்வரை விருப்ப மனு கொடுத்துள்ளனர். பாமகவில் 2500 பேர் வரை சீட் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தே.மு.தி.க.,வும், இன்று முதல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. விருப்ப மனு தாக்கல் மூலம், பரபரப்பை அரங்கேற்ற வேண்டும் என, விஜயகாந்த் விரும்புவதாகவும் இதற்காக, புதிய வியூகமும் வகுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்நாளான இன்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கோயம்பேடு அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர். பொது தொகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமும் தனி தொகுதிகளுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணம் செலுத்தி மனு கொடுத்தனர்.

பெண்களும் ஆர்வமுடன் வந்து மனு கொடுத்தனர்.சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை மனு கொடுத்தார். மேலும் பல திருநங்கைகள் மனு கொடுக்க வந்திருந்தனர். ராதிகா கூறும்போது, கடந்த தேர்தலில் விஜயகாந்த் பெயரில் மனு செய்தேன். இந்த தேர்தலில் நான் மனு கொடுத்துள்ளேன். எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் வரலாற்றில் இடம் பெறுவோம். எங்கள் சமூகத்துக்கு அங்கீகாரமும் கிடைக்கும் என்றார்.

தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களும், மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், அக்டோபர் மாதம் நடக்கும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் மாவட்டச் செயலர்கள் மூலம், ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளாராம் விஜயகாந்த். இதனால் அதிமுக, திமுகவிற்கு நிகராக விருப்ப மனு அளிப்போர் எண்ணிக்கையை அதிகரித்து மாஸ் காட்டவேண்டும் என்று நினைக்கிறாராம் விஜயகாந்த். இன்று முதல் தினசரி மாலை 5 மணி வரை மனுக்கள் கொடுக்கலாம். வருகிற 14ம்தேதி வரை விருப்ப மனுக்கள் கோயம்பேடு அலுவலகத்தில் பெறப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications