நாளை அறிவிக்கப்பட்ட பஸ் ஸ்டிரைக் இன்றே பல இடங்களில் தொடங்கியது.. மக்கள் அவதி!
சென்னை: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 22 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
பல இடங்களில் இன்றே ஸ்டிரைக் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் புத்தாண்டுக்கு ஊருக்குப் போகக் கிளம்பும் மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் பேருக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாததைக் கண்டித்து தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யுசி, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் வரும் 29-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக முடிவு செய்து அறிவித்திருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி நாளை போராட்டத்தைத் துவக்காமல், இன்றே திடீரென போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து பணிமனைகள் முன்பும் பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள நெல்லை,மதுரை , கும்பகோணம், கோவை, சேலம், விழுப்புரம் , உட்பட பல்வேறு மண்டலங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தி்ல் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் பல்லவன் இல்லம், திருவான்மியூர், அண்ணாநகர் ஆலந்தூர் பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விருதுநகர் , விருத்தாசலம், நெய்வேலி, திருச்சி, சேலம் ஆகிய பணிமனைகளிலும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் இப்போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தி வரும் நிலையில் அண்ணா தொழிற்சங்கம் மட்டும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பழனியில் கலாட்டா:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போவில் பஸ்களை எடுக்க விடாமல் பலர் கலாட்டா செய்துள்ளனர். அதை சிலர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அங்கு மோதல் வெடித்துள்ளது. பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்ததால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல தமிழகம் முழுவதும் பல இடங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications