இன்ஸ்பெக்டர் எங்கள் வாகனத்தை 2 முறை எட்டி உதைத்தார்.. 3வது உதையில்.. கதறும் உஷாவின் கணவர் ராஜா
திருச்சி: காவல் ஆய்வாளர் தங்களின் வாகனத்தை 2 முறை எட்டி உதைத்ததாக பலியான உஷாவின் கணவர் ராஜா தெரிவித்துள்ளார். மூன்றாவது முறை உதைத்தபோது உஷா கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கதறியுள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி பெண்ணான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த பொது மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறை பொதுமக்கள் மீது தடியடி நடத்தியது.
இதில் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உஷாவின் கணவர் ராஜா காவல் ஆய்வாளர் 2 முறை விரட்டி விரட்டி தங்கள் வாகனத்தை எட்டி உதைத்தார் என தெரிவித்தார்.
மூன்றாவது முறை உதைத்ததில் உஷா கீழே விழுந்து உயிரிழந்தார் என்றும் கணவர் ராஜா கதறினார். காவல் ஆய்வாளரால் உயிரிழந்த உஷாவின் உடலை வாங்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதியாததால் உடலை வாங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார். காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்றும் உஷாவின் கணவர் ராஜா தெரிவித்தார்.