ஜல்லிக்கட்டு போராட்டம்.. தமிழக - கேரளா எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்..வர்த்தகம் பாதிப்பு
லாரி ஓட்டுநர் சங்கத்தினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் லாரிகள் இயங்கவில்லை.
செங்கோட்டை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதன் எதிரொலியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றனர்.

லாரி ஓட்டுநர்கள் ஆதரவு
லாரி ஓட்டுநர் சங்கத்தினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் லாரிகள் இயங்கவில்லை. இதனால் தமிழக, கேரள எல்லையான செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. புளியரை சோதனை சாவடி மற்றும் கேரளா செல்லும் கொல்லம், திருமங்கலம் சாலையும் வெறிச்சோடியது.
வர்த்தகம் பாதிப்பு
தமிழக கேரள எல்லை புளியரை வழியாக பாவூர் சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் கேரளாவிற்கு லாரிகளில் காய்கறி, அரிசி, பால், பூ, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்கள் கொண்ட செல்லப்படுவது வழக்கம். மேலும் சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் ஆயிரகணக்கான லாரிகளில் செங்கோட்டை புளியரை வழியாக கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் லாரிகள் இயங்காததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் வேலை நிறுத்தம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செங்கோட்டை அருகே உள்ள பிரானுர் பார்டரில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இரவிலும் போராட்டம்
செங்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் காலையில் பள்ளிக்கு செல்லாமல் பேருந்து நிலையம் அருகே உள்ள வாஞ்சி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் தென்காசி வாய்க்கால் பாலம் அருகில் நேற்று முதல் 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். செங்கோட்டையில் மாணவர்களை இரவிலும் போராட்டத்தில் ஈடுபபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications