தமிழகம் முழுவதும் தீவிரமடைந்த ஸ்டிரைக் வாபஸ் ஏன்?.... தொழிற்சங்க நிர்வாகிகள் விளக்கம்
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்று உள்ளனர்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டதால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் அருகே ஏராளமான ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்தால் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்க இருந்த பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
இந்நிலையில் அவர்களை சமாதானப்படுத்த பல்லவன் இல்லத்துக்கு வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வரும் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்தார். இதனை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதன் பேரில் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

மற்ற மாவட்டங்களிலும் பரவியது
ஆனால், சங்க நிர்வாகிகளின் இந்த முடிவை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் ஒருபகுதியினர் ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் அனைத்து மாவட்டங்களும் பரவியதால், கடலூர், விழுப்புரம், மதுரை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தனர்.

போராட்டம் வாபஸ்
இதனையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பல்லவன் இல்லத்திலேயே ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் அவர்கள் கூறுகையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அரசு எந்த வித முடிவையும் அறிவிக்க முடியாது. டிசம்பர் 27, 28 பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவெடுப்பதாக உறுதி அளித்துள்ளாதால் தற்போதைய போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நாளை முதல் இயங்கும்
நாளை முழுவதும் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல இயங்கும். மேலும், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து பேசி அனைத்து தொழிற்சங்கங்களும் அறிவிக்க உள்ளதாக நிர்வாகிகள்
கூறினர். இதனையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications