சென்னை பல்லவன் இல்லம் முன் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்
பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை உடனே வழங்குமாறு பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 6-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இனி பேச்சு இல்லை
இந்நிலையில் நேற்றைய தினம் நிதி துறை செயலாளருடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அரசு ஊழியர்களை காட்டிலும்
அரசு ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய குழு பரிந்துரை செய்து ஊதிய உயர்வு வழங்குவதாகவும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 2.57 சதவீத மடங்கு ஊதியத்தை பெற்றுவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று ஆலோசனை
இந்நிலையில் இன்று அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பும் குடும்பத்தினருடன் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் நேற்று அறிவித்தன. அதன்படி பல்லவன் இல்லத்தில் தங்கள் குடும்பத்தினருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை முற்றுகை போராட்டம்
சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.நாளை தலைமை செயலகத்தையும் முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர். சாலையில் பேரிகாடு அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் குடும்பத்தினருடன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications