சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை... மாநகர பேருந்து நிறுத்தங்கள் வெறிச்!
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் இருந்து ஒரு பேருந்து கூட ஓடவில்லை.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் மாநகர மற்றும் புறநகர் பேருந்துகள் ஒன்று கூட ஓடாததால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
ரூ.7000 கோடி நிலுவைத் தொகை பாக்கி உள்ளதால் அதை உடனடியாக வழங்கும்படி தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்படவில்லை எனில் மே 15-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முந்தைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்குவதாக ஒப்புக் கொண்டார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை
சென்னையில் நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

மேலும் ரூ.500 கோடி
இந்த பேச்சுவார்த்தையில் ஏற்கெனவே வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூ.750 கோடியுடன் சேர்த்து மேலும் ரூ.500 கோடி என ரூ.1250 கோடி வழங்க ஒப்புதல் அளிப்பதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ரூ.7000 கோடி...
கடந்த 20 ஆண்டுகளாக ரூ.7000 கோடி நிலுவைத் தொகை உள்ள நிலையில் வெறும் ரூ.1250 கோடி மட்டுமே அரசு வழங்குவதாக தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அரசு ஊழியர்களுக்கு அரசு பட்டை நாமம் போட்டுவிட்டதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

நேற்று முதல்...
இன்று அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்றே தொடங்கிவிட்டன. இதனால் சென்னை, தஞ்சை, அரியலூர், திருவாரூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் வெறிச்...
சென்னையில் இருந்து ஒரு பேருந்து கூட இயக்கப்படாததால் மாநகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வெளியூர் மற்றும அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் குவிப்பு
பேருந்துகள் ஓடவில்லை என்றாலும் கூட கோயம்பேடு, தாம்பரம், சைதாப்பேட்டை ஆகிய பணிமனைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆட்டோ, டாக்ஸிகளில் அதிகம் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications