தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை! உடன்பாடு ஏற்படுமா?
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 13ம் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். இது காலதாமதமாகி வந்ததால் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர கோரி கடந்த மார்ச் 7ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் தொ.மு.ச. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த மாதம் மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இது ஆளும் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி ஆகியோர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி அரசுப் போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கிடையில் மதுரை ஹைகோர்ட்டு, தாமாக முன்வந்து, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை ஏன் இதுவரை வழங்கவில்லை என கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இன்று சென்னை குரோம்பேட்டையில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை செயலாளர், 47 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்னர் தான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க இயலும். என்று தெரிகிறது.