சாதி சான்றிதழ் கோரி அரிச்சலூரில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் பள்ளி முன்பு தர்ணா..பரபரப்பு
ஜாதி சான்றிதழ் வழங்க கோரி பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
ஈரோடு: அரச்சலூரில் பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கக் கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள ஜே.ஜே.நகரில் 200 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் நீண்டகாலமாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால், மாணவர்கள் உயர்கல்வி பெறவும் வேலை வாய்ப்பு பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாகவும் பழங்குடி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க்கோரி பள்ளி திறந்த முதல் நாளான இன்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பூம்பூம் மாட்டுக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் இவர்களது உறவினர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கியுள்ளதைப்போல தங்களுக்கும் வழங்க வேண்டும் என இவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். தங்களுக்கு உடனடியாக ஜாதிசான்றிதழ் வழங்காவிட்டால் தங்களது பட்டா, குடும்ப அட்டை போன்றவற்றை அரசிடம் திருப்பி வழங்க போவதாகவும் போராட்டத்தில் பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.