மும்பை விவசாயிகள் பேரணியை போல திருச்சியை திணற வைத்த டெல்டா விவசாயிகள்.. விமான நிலையம் முற்றுகை
Recommended Video

திருச்சி: டிடிவி தினகரன், அ.ம.மு.க கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகளால் திருச்சி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான அய்யாகண்ணு தலைமையில் திரளான விவசாயிகளும் பங்கேற்றனர். தினகரன், அய்யாகண்ணு, பி.ஆர்.பாண்டியன் போன்ற தலைவர்கள் வேனில் நின்றபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அப்போது ஒலிபெருக்கி வாயிலாக பேசிய அய்யாகண்ணு, "விவசாயிகளுக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்து ஆதரவை ஆரம்பித்து வைத்தவர் டிடிவி தினகரன்" என புகழாரம் சூட்டினார். அநாதைகளாக இருந்த எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் டிடிவி தினகரன் என்றும் அய்யாகண்ணு தெரிவித்தார்.

முற்றுகை
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், விவசாயிகளும் திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் குவிந்ததால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. விமான நிலையங்களுக்கு செல்வோரும், வெளியே வருவோரும் உரிய நேரத்தில் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அங்கே சேர்ந்தது.

மும்பை பாணி போராட்டம்
மும்பையை சமீபத்தில் அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள் பேரணியை போல திருச்சியில் டெல்டா விவசாயிகளின் பேரணி நடந்தது. எங்கு பார்த்தாலும் விவசாயிகள் தலையாக தென்பட்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகளும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் திருச்சியில் குவிந்ததால் விமான நிலைய பகுதியே ஸ்தம்பித்தது.

தடுப்பு உடைப்பு
திருச்சி விமான நிலையத்தை சூழ்ந்த விவசாயிகளும், தினகரன் ஆதரவாளர்களும், தடையை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை சிலர் உடைத்து எறிந்தனர்.

தினகரன் கைது
அப்போது தொண்டர்களையும், விவசாயிகளும் அமைதிகாக்குமாறு தினகரன் மற்றும் அய்யாகண்ணு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பிறகு அய்யாகண்ணு தலைமையில் காவிரி தொடர்பாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதை வழிமொழிந்து, தொண்டர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து தினகரன், அய்யாகண்ணு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். தொண்டர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications