திருச்சியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்– 5 பேர் பரிதாப பலி
திருச்சி: திருச்சி அருகே பஞ்சப்பூரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலியான 5 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் மேலும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். குடும்பத்துடன் கும்பகோணத்தில் வசித்து வரும் இவர் குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
காரை ரமேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்தக் கார் பஞ்சப்பூர் அருகில் இன்று அதிகாலை 1 மணியளவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது.
அச்சுவரை தாண்டிச் சென்ற கார், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி செய்திப் பத்திரிகை கொண்டு சென்ற மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கண்ணன், அவரது மகன் ராஜ்குமார், மாமனார் வெங்கடசாமி, உறவினர் மாடசாமி, எதிரில் வந்த காரில் அமர்ந்திருந்த பிரதீப் உட்பட 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கண்ணன் மனைவி விஜயலட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு கார் டிரைவர்களான ரமேஷ், நாகராஜன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications