பாலியல் புகார் எதிரொலி: திருச்சி துணை மேயர் ஆசிக் மீரான் ராஜினாமா
திருச்சி: தன்னை காதலித்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து அ.தி.மு.க.வை சேர்ந்த திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஆசீக் மீரான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும், சுற்றுச்சுழல் துறை முன்னாள் அமைச்சருமாக இருந்தவர் மரியம் பிச்சை. இவர் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை சட்டப்பேரவையில் நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு செல்லும் போது கார் விபத்தில் பலியானார்.
இதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 27-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரியம் பிச்சையின் மகன் மரியம் ஆசிக் மீரான் (வயது 32) திருச்சி மாநகராட்சியின் துணை மேயராக அறிவிக்கப்பட்டார்.
அவர் கடந்த 3 ஆண்டுகளாக துணை மேயராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை மரியம் ஆசிக் மீரா தனது துணை மேயர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
பெண் புகார்
இதனிடையே, ஆசிக் மீரான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக துர்கா என்ற பெண் இருதினங்களுக்கு பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
உள்ளிருப்பு போராட்டம்
ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்ததால், மீரானுக்கு பிறந்த மூன்று மாத பெண் குழந்தை மற்றும் மாற்றுத்திறனாளி தாயுடன் அவர் காவல்நிலையத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலை மிரட்டல்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தன்னை மணந்துகொள்வதாக கூறி ஆசிக் மீரான் கடந்த 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், தற்போது ஆசிக் மீரான் மற்றும் அவரது 2-வது மனைவியின் உறவினர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் மனுவில் துர்கா கூறியுள்ளார். தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆசிக் மீரான் ராஜினாமா
இந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், துணை மேயர் ஆசிக் மீரான், தனது துணை மேயர் பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி மேயர் ஜெயாவிடம் அவர் அளித்துள்ளார்.
திருச்சி மேயர் பேட்டி
இதுகுறித்து திருச்சி மேயர் ஜெயா, திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி ஆகியோர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெயா, திருச்சி துணை மேயராக இருந்த ஆசிக் மீரான் இன்று காலை எனது வீட்டிற்கு வந்து தன்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக துணை மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு தீர்மானமாக நிறைவேற்றி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம் என்றார்.
கோவை மேயர் ராஜினமா
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை அ.தி.மு.க வேட்பாளர் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிக்கு மாநகராட்சி மேயராக இருந்த சே.ம.வேலுச்சாமியே காரணம் என்று கட்சியின் மேலிடத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது மேயர் பதவியை வேலுச்சாமி ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பாலியல் புகாரில் திருச்சி துணை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.