திருச்சி பொதுக்கூட்டம் மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: நாளை திருச்சியில் நடக்க உள்ள காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெருந்தலைவர் காமராஜரின் 113வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 23.7.2015 வியாழன் மாலை 3 மணியளவில் திருச்சி 'ஜி கார்னர்' மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் சிறப்பு பேருரையாற்றுகிறார்.

இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வருகை புரியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை திருச்சி கூட்டம் ஏற்படுத்த இருக்கிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுக்கூட்டத்திற்கு வருகை புரியும் காங்கிரஸ் கட்சியினர் பயணம் செய்த வாகனங்களை நிறுத்துவதற்கு திருச்சி மாநகரில் விரிவான ஏற்பாடுகள் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி மாவட்டவாரியாக வாகனங்களை நிறுத்துவதற்கு கீழ்கண்டவாறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படிதான் மாவட்டங்களிலிருந்து வருகை புரிகின்ற வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை பகுதியிலிருந்து வருகிற வாகனங்கள் நெம்பர் 1 டோல்கேட், 'ஒய்' ரோடு ஜங்ஷன், பால்பண்ணை வழியாக முத்துமணி டவுன், டிஎஸ்ஆர்எம், இந்து பத்திரிகை அலுவலகம் அருகில், வாஸ்நகர், அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள ஆர்வி மைதானம், தனரத்தினா நகரிலுள்ள ஆர்வி மைதானம், விஸ்வாஸ் நகர், சஞ்சீவ் நகர் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சேலம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் நம்பர் 1 டோல்கேட், 'ஒய்' ரோடு ஜங்ஷன் பால்பண்ணை வழியாக வாகனங்களை நிறுத்தும் இடத்திலேயே வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவை, கரூர் பகுதியிலிருந்த வரும் வாகனங்கள் கொடமுருட்டி செக்போஸ்ட், அண்ணா சிலை, மாம்பழ சாலை, கேகே சாலை, கேகே சாலை பைபாஸ் ஜங்ஷன் கொண்டையம்பேட்டை வழியாக மேற்படி கூறப்பட்டுள்ள இடத்திலேயே வாகனங்கள் நிறுத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் எஸ்ஐடி ஜங்ஷன், மேல அம்பிகாபுரம் வழியாக பொன்மலை சந்தை பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து வரும் வாகனங்கள், திருச்சி விமான நிலையம், கொட்டப்பட்டு ஜங்ஷன், இந்திரா நகர், பொன்மலைப்பட்டி வழியாக பொன்மலை பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மணப்பாறை, விராலிமலை, மணிகண்டம் வழியாக வந்து, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்சி குவாரி அருகிலும், மன்னார்புரம் ராணுவ மைதானத்திலும், காஜா மலை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இடங்கள் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, மதுரை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மேற்படி கூறப்பட்ட வழித்தடத்தில் வந்து அதில் கூறப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications