திருச்சியில் அனுமதியின்றி நிலவேம்பு குடிநீர் கொடுத்த சுதீஷ் - பாய்ந்தது வழக்கு!
திருச்சியில் பொதுமக்களுக்கு அனுமதியின்றி நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்ததாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி : திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ததாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதோடு, நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுனாமி, புயல் போன்ற எந்த பேரிடரானாலும் தேமுதிகவின் முன் நின்று உதவுவது போல தமிழகத்தை ஆட்கொண்டிருக்கும் டெங்குவை ஒழிக்க குப்பைகளை அகற்றுவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தி இருந்தார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நம்மால் இயன்றதை செய்வோம் என்றும் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நேற்று திருவள்ளூரிலும் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் டெங்குவால் பாதித்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தேமுதிக மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த்தும் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை நேற்றைய தினம் சந்தித்தார்.
இதே போன்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மீது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்றைய தினம் நிலவேம்பு கசாயம் வழங்கும் விநியோகிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சுதீஷ் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் அளித்ததோடு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
இந்நிலையில் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக கூட்டம் கூட்டியதாக சுதீஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது இடத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.