தமிழகத்தில் ஆட்சியே நடைபெறவில்லை.. விரைவில் தேர்தல் வரும்.. திருச்சி சிவா சூசகம்
தமிழகத்தில் ஆட்சியே நடைபெறவில்லை என்றும் விரைவில் தேர்தல் வரும் என்றும் திமுக மாநிலங்களவை எம்.பி., திருச்சி சிவா கூறியுள்ளார்.
சேலம்: தமிழகத்தில் ஆட்சியே நடைபெறவில்லை எனவும் பிரதமர் மோடி தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்காதது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியும், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தி திணிப்பு மற்றும் நீட் நுழைவு தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று சேலத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக அரசு மெல்ல மெல்ல கொண்டு வருவதாகவும், நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவாகிவிடும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் நிலை குறித்தும், வறட்சி மற்றும் விவசாயிகள் பற்றியும் பேசுவதற்காக பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை என தெரிவித்தார். ஆனால், எந்த பதவியிலும் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க, பிரதமர் நேரம் ஒதுக்கியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில் தற்போது ஆட்சியே நடைபெறவில்லை என்றும் விரைவில் தேர்தல் வரும் என்றும் அவர் கூறினார்.