கூடங்குளம் அணு உலைக்கு சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..சாலையில் சிதறிய சிலிண்டர்கள்.. பரபரத்த நெல்லை
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 180 ஹைட்ரஜன் வாயு சிலிண்டர்களுடன் வந்துகொண்டிருந்த லாரி ஒன்று நெல்லை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்து சிலிண்டர்கள் அனைத்தும் சாலையில் உருண்டு ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. இந்த அணு மின் நிலையத்திற்கு தேவையான பொருட்கள் அவ்வப்போது கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கூடங்குளம் அணும் மின் நிலையத்திற்கு தேவையான ஹைட்ரஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

விபத்துக்குள்ளான லாரி
லாரியானது தலா 43 கிலோ எடை கொண்ட 180 ஹைட்ரஜன் வாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கூடங்குளத்துக்கு புறப்பட்டது. இந்த லாரி நெல்லை -கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் ஐ.ஆர்.டி பாலிடெக்னிக் கல்லூரி அருகே லாரி வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஒருபக்கமாக கவிழ்ந்ததில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சிலிண்டர்கள் சாலை முழுவதும் உருண்டு ஓடின.

முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை
இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளான தகவல் தீ அணைப்பு போலீசாருக்கு கொடுக்கப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஹைட்ரஜன் சிலிண்டர்கள் தீ பிடித்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலிண்டர்கள் மீது தண்ணீர் ஊற்றி குளிர்வித்தனர்.

வாயு வெளியேறுகிறதா?
பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சிலிண்டர்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதனால், நான்கு வழிச்சாலையில் போக்குரத்து நிறுத்தப்பட்டு பக்கவாட்டு சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அணுமின் நிலையத்திற்கு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்த தகவல் அறிந்து அணு நிலையத்தில் இருந்து தீ அணைப்பு அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். சிலிண்டர்களில் இருந்து வாயு வெளியேறுகிறதா என ஆய்வு கருவி முலம் ஆய்வு செய்து சிலிண்டர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தினர்.

வேறு லாரி மூலமாக
இதன்பிறகு வேறு லாரி மூலம் சிலிண்டர்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நான்கு வழிச்சாலையில் கூடங்குளத்திற்கு ஹைட்ரஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளாகி சாலையில் சிலிண்டர்கள் சிதறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications