பெங்களூரில் வெறியாட்டம்… ஓசூரில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற கலவரத்தில் லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக எல்லையான ஓசூரில் லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி பிரச்சனையில் பெங்களூருவில் நடைபெற்ற கலவரத்தில் 50க்கும் மேற்பட்ட லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. மேலும் லாரி ஓட்டுநர் ஒருவரை நிர்வாணப்படுத்தி போராட்டக்காரர்கள் சித்ரவதை செய்தனர்.
மற்றொரு லாரி ஓட்டுநரை முதியவர் என்றும் பார்க்காமல் அடித்து தாக்கினர்.
இதனைக் கண்டித்து, தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூரில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக லாரிகளுக்கும் அதன் ஓட்டுநர்களுக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும், தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் பாதுகாப்புடன் இயக்கப்படுவது போல் கர்நாடக மாநிலத்திலும் உரிய பாதுகாப்போடு தமிழக லாரிகள் இயக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.