திருடச் சென்ற வீட்டில் ஆம்லேட் போட்டு சாப்பிட்ட பலே திருடர்கள் !
சென்னை: புது வண்ணாரப்பேட்டையில் திருடச் சென்ற வீட்டில் நகையும், பணமும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் சமையல் அறையில் புகுந்து ஆம்லேட் போட்டு சாப்பிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜு (45). இவர் குடும்பத்தோடு கடந்த 21-ந்தேதி வேளாங்கண்ணிக்கு சென்றார். நேற்று காலையில் வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. சமையல் அறையிலும் பாத்திரங்கள் சிதறி கிடந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என நினைத்த ராஜூ, பணம் மற்றும் நகைகளை ரகசியமாக மறைத்து வைத்திருந்த இடத்தை பார்த்தார்.
ஆனால் நகை பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. மாறாக கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முட்டையை எடுத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. மேலும் .பிரிட்ஜில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்ட கொள்ளையர்கள் அதில் இருந்த மீதி பழங்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு அள்ளிச் சென்றனர்.
இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்ற ராஜு, 5 பவுன் நகையை ஒரு இடத்திலும், ரூ.7 ஆயிரம் ரொக்கப் பணத்தை இன்னொரு இடத்திலும் ரகசியமாக மறைத்து வைத்து விட்டு சென்றிருந்தார். இதனால் அந்த நகையும், பணமும் தப்பியது குறிப்பிடத்தக்கது.