தமிழகத்தில் சுனாமி கோரத் தாண்டவம் நடத்திய 12வது ஆண்டு நினைவு தினம் இன்று!
சுனாமி பேரலை தமிழகத்தில் கோரத்தாண்டவம் நடத்திய 12வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை: 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்து பல்வேறு பகுதிகளை அழித்தது.
சுனாமியின் கோரத் தாண்டவத்தினால் தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேஷியா நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின. உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய இந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. இது, இந்த நுாற்றாண்டின் நான்காவது பெரிய நிலநடுக்கம்.

சுனாமியால் அதிகம் பாதிப்புக்குள்ளானது தமிழகம். இதில், மிக அதிக பாதிப்புக்குள்ளானது நாகப்பட்டினம் மாவட்டம். இந்தியாவில் 9571, இந்தோனேஷியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் சுனாமிக்கு பலியாயினர்.
தமிழகத்தை பொறுத்தளவில், நாகபட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5819 பேரும், சென்னையில் 206, கடலுாரில் 603, காஞ்சிபுரத்தில் 124 பேரும் பலியாயினர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று சுனாமி பேரலை தாக்கிய 12வது வருட நினைவு தினமாகும். மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள், மீனவக் கிராமங்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் சுனாமி 12ம் ஆண்டு நினைவு நாளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. சுனாமியால் இறந்தவர்கள் உறவினர்கள், கடலுக்குள் பால் ஊற்றி தங்களது உறவினர்களை நினைவுபடுத்திக் கொள்வது வழக்கம்.












Click it and Unblock the Notifications