சுருட்டிப் போட்ட சுனாமி - ஆழிப்பேரலையில் 11வது ஆண்டு நினைவு தினம் இன்று; மக்கள் அஞ்சலி!
சென்னை: தமிழகத்தினைச் சுழற்றியடித்துச் சென்ற "சுனாமி" என்னும் ஆழிப்பேரலை விட்டுச் சென்ற நினைவுகளின் 11வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
11 வருடங்களுக்கு முன்பு, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவானது.
இது வலுவடைந்து இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுதான் சுனாமி:
ஜப்பானிய மொழியில் துறைமுக பேரலை என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது. பூமிக்கடியில் பிளேட்டுகள் என அழைக்கப்படும் அமைப்புகள் உள்ளன. இதன் மீதே, ஒவ்வொரு கண்டமும், கடலும் உள்ளது. இதைத் தான் டெக்டானிக் பிளேட்கள் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மோதலால் நிலநடுக்கம்:
இந்த பிளேட்டுகளின் இடம்பெயர்வின் காரணமாக, ஒன்றுடன் ஒன்று மோதும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. அவ்வாறு, கடலுக்கடியில் ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் சுனாமியை உண்டாக்குகிறது. இதுமட்டுமல்லாமல், கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கத்தாலும் சுனாமி அலைகள் தோன்றுகின்றன.

அலைகளின் தாமதமே காரணமாம்:
எச்சரிக்கை மையம் மூலம் சுனாமி உருவாகியுள்ளது மற்ற நாடுகளிலுள்ள அலுவலகங்களுக்கு 3 நிமிடங்களில் சென்று சேரும் என்றாலும், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப்பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும். இது போன்று ஏற்பட்ட காலதாமதமே 2004 ஆம் ஆண்டு சுனாமியின் தாக்கத்தில் அதிக உயிர்களையும் பொருட்களையும் இழந்ததற்கு காரணமாக அமைந்தது.

கொத்துக் கொத்தாய் சாவு:
இதில் சிக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலத்த பொருள் சேதமும் ஏற்பட்டது. பலர் தங்கள் உடமைகளையும் இழந்தனர். நாகை, கடலூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாகை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கடலூரில் சுமார் 600 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அன்று சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நினைவு கூறும் மக்கள்:
சுனாமி பேரழிவு ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சுனாமியால் வாழ்வாதாரத்தினை, உறவுகளைத் தொலைத்த மக்கள் ஆங்காங்கே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தும், சுனாமி தாக்கிய கடற்கரைகளில் மலர் தூவியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி:
சுனாமியில் இறந்தோர் அடக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் இறந்தவர்களின் உறவினர்கள், பொதுநல அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமைதி ஊர்வலங்களும் நடைபெற்று வருகின்றன. சுனாமி நினைவு தினத்தினை ஒட்டி கடற்கரையோர பகுதிகளில் மீன் விற்பனை இன்று ஒருநாள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications