அடிக்கடி உள்வாங்கும் கடல்.. சுனாமி வருமோ என்ற பீதியில் சென்னை!
சென்னை: சென்னையில் அடிக்கடி கடல் உள் வாங்கி வருவதால் மக்களிடையே பீதி நிலவுகிறது. குறிப்பாக மீனவர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
கடலும் தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படுவதால் தொழிலுக்கும் அவர்களால் போக முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் பட்டினப்பாக்கம் பகுதியில் கடலரிப்பு பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது.
தற்போது வங்கக்கடலில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கடுமையான நீரோட்டம் காணப்படுகிறது. இந்த கடும் நீரோட்டம் காரணமாக தமிழக கடலோரப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி கடல் உள் வாங்குகிறது. மேலும் சீனிவாசபுரம் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தவண்ணம் உள்ளது.

சமீபத்தில்தான் 45 நாள் மீன்படி தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்லத் தொடங்கியிருந்தனர். ஆனால் கடல் சீற்றம் நீடிப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள், மீன்பிடி வலைகளும் சேதம் அடைந்துள்ளன. கடல் சீற்றத்துக்கு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் கடலோரப்பகுதி மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
கடந்த வாரம் 10 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்து கரையை தாக்கியது. இதனால் சீனிவாசபுரத்துக்குள் கடல் நீர் புகுந்தது சுமார் 50 வீடுகள் பாதிக்கப்பட்டன. கடல் சீற்றம் நீடித்ததால் சீனிவாசபுரத்தில் இருந்து பலர் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். அப்பகுதி மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
இன்று காலை சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியது கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் 10 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்ளே சென்றது. மேலும் சீற்றமும் குறைந்தது. ஆனால் சிறிது நேரம் கழித்து கடல் அலைகளின் சீற்றம் மீண்டும் அதிகரித்தது. இந்த மாற்றத்தால் கடலோர மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சீனிவாசபுரம் பகுதி மக்களிடம் சுனாமி பீதி ஏற்பட்டது.
மேலும் மக்களிடையே சுனாமி பீதியும் நிலவுகிறது. 2004ம் ஆண்டும் இப்படித்தான் அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் உள்வாங்கி வந்தது. இ்த நிலையில் அதேபோல இப்போதும் நிலைமை உள்ளதால் சுனாமி வருமோ என்ற பீதியில் மீனவர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications