’வாங்கய்யா வாத்தியாரய்யா.. ’ பாடல் ஒலிக்க மேடைக்கு வந்த தினகரன்: விண்ணைப்பிளந்த தொண்டர்களின் ஆரவாரம்
’வாங்கய்யா வாத்தியாரய்யா.. ’ பாடல் ஒலிக்க மேடைக்கு டி.டி.வி தினகரன் வந்தபோது தொண்டர்கள் ஆரவாரமாக கரவொலி எழுப்பினர்.
Recommended Video

மதுரை : மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் 'வாங்கய்யா வாத்தியாரய்யா.. ' பாடல் ஒலிக்க மேடைக்கு டி.டி.வி தினகரன் வந்தபோது தொண்டர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் டி.டி.வி தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்று அறிமுகப்படுத்தினார். இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
டி.டி.வி தினகரனுடன் தகுதிநீக்க வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்களும் கலந்துகொண்டனர். முன்னதாக தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேசினர்.

வரம் வாங்கிய அரக்கன்
மேடையில் பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன், 'நான் யார் தலையில் கைவைக்கிறேனோ, அவர் மடிய வேண்டும் என சிவனிடம் வரம் பெற்ற அரக்கன், இறுதியில் சிவன் தலையிலேயே கைவைத்தது போல உள்ளது, ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ன் செயல். தினகரன் இல்லையென்றால், இப்போது அந்த இருவரும் இல்லை'' எனக்கூறி தங்க தமிழ்ச்செல்வன் தனது உரையை முடித்தார்.

எம்.ஜி.ஆரின் மாஸ் பாடல்
முன்னதாக திறந்தவெளி வேனில் வந்த டி.டி.வி தினகரனை பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் விழா மேடைக்கு தினகரன் வந்து சேர அதிக நேரம் பிடித்தது. வேனில் இருந்து இறங்கி எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா படங்களுக்கு பூத்தூவி விட்டு தினகரன் மேடைக்கு வரும் போது, எம்.ஜி.ஆரின் 'வாங்கய்யா வாத்தியாரய்யா.. ' பாடல் ஒலித்தது. அப்போது தொண்டர்கள் கைதட்டி ஆர்பரித்தனர்.

துரோகிகளின் சூழ்ச்சி
அவருக்கு மேடையில் வெற்றிவேல் வெள்ளிவேலை பரிசாக வழங்கினார். பிறகு டி.டி.வி தினகரன் பேசும்போது, ''துரோகிகள் அளித்த மனுவால், நமது வெற்றிச் சின்னமான அ.தி.மு.க சின்னத்தையும், கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன்பிறகு, ஆர்.கே நகர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, உங்கள் வீட்டுப்பிள்ளையான நான் தி.மு.கவின் டெபாசிட்டை இழக்கச் செய்ததோடு, வேறு வழியில்லாமல் அதிமுகவையும் தோற்கடித்தேன்'' என்றார்.

பெயரைக்கேட்டால் அதிரும்
மேலும், விரைவில் அதிமுகவையும், ஆட்சியையும் மீட்போம் என்று சூளுரைத்தார். அதன் பிறகு தினகரன் பெயரை சொன்னால் அதிரும் என்கிற பாடல் ஒலித்தது. அதற்கும் தொண்டர்கள் கைதட்டி, விசிலடித்து மகிழ்ந்தனர். விழா மேடையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பெயரையும், கறுப்பு வெள்ளை சிவப்பு கொடியில் ஜெயலலிதா இருக்கும் படத்தையும் தினகரன் அறிமுகப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications