“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு!
சென்னை: "திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆதரவு பெற்றுள்ளார் விஜய். ஆட்சியில் இருந்து கொண்டு ரீல்ஸ் ஓட்ட முடியாது. தவெக அரசு தவறான பாதையில் செல்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்" அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் டிடிவி தினகரன். ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்று உள்ளது என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆதரவு பெற்றுள்ளார் விஜய். 108 தொகுதி தானே உங்களுக்கு மக்கள் கொடுத்துருக்காங்க. ஆட்சியில் இருந்து கொண்டு ரீல்ஸ் ஓட்ட முடியாது. ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்று உள்ளது என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும்.
தவெக அரசு தவறான பாதையில் செல்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்.
மாற்றம் வேண்டும் என்ற பெயரில் ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கை சரி செய்ய அவகாசம் கேட்கக்கூடாது. அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் வென்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான எஸ். காமராஜ், திடீரென தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக ஒரு கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தனது எம்.எல்.ஏ-வை தவெக குதிரை பேரம் பேசி, கடத்திச் சென்றுவிட்டதாக தினகரன் குற்றம் சாட்டினார். தொடர்ந்து, காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தார். இதன் காரணமாக தனது கட்சியின் ஒரே எம்.எல்.ஏவான காமராஜை கட்சியை விட்டு நீக்கிய தினகரன், தவெகவை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications