இது என்ன சினிமா சூட்டிங்கா, எழுதி கொடுத்ததை பேசுவதற்கு? ரஜினியை கேள்விகளால் வறுத்த டிடிவி தினகரன்
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த்தை தனது கடுமையான கேலி, கிண்டல் விமர்சனங்களால் உண்டு இல்லை என செய்துவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன்.
சட்டசபை வாயிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் எப்படி கை நீட்டி, நீட்டி ஆவேசமாக பேசினாரோ அதையே கேலியாக செய்து காண்பித்தார்.
ரஜினி பெயரை கூறுவதை தவிர்த்தாலும், அவரை போலவே ஆக்ஷன்களை செய்து காண்பித்ததோடு, ரஜினி கூறிய கருத்துக்கு பதிலளித்து பேசினார் தினகரன்.

என்ன செய்ய வேண்டும்
தினகரன் அளித்த பேட்டி இதுதான்: தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போட்ட அரசு உத்தரவை ஸ்டெர்லைட் எளிதாக கோர்ட்டில் முறியடித்துவிடும். சட்டசபையில் தாமிர உருக்காலையை தமிழகம் முழுக்க அனுமதிக்க மாட்டோம் என கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட முடியும். 17 வயது பெண் வாயில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர், சமூக விரோதியா?

தூங்கிக்கொண்டிருந்தார்களா?
சமூக விரோதிகள் தூண்டியதால் போராட்டம் நடந்ததாக கூறுகிறார்களே, மணிராஜ் என்ற கொலை செய்யப்பட்ட இளைஞர் வீட்டுக்கு போனபோது அவர் தாய் கூறுகிறார், எங்களையும் சுட்டு கொலை செய்யுங்கள், என்று. அந்த அளவுக்கு பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர். திருவிழா கூட்டத்தில் பிக்பாக்கெட் வருவார்கள் என்று தெரியும்தானே, அதேபோல போராட்டத்தில் சமூக விரோதிகள் வருவார்கள் என போலீசாருக்கு தெரியாதா, உளவுத்துறைக்கு தெரியாதா, கியூ பிரிவு என்ன செய்தது, தூங்கிக் கொண்டிருந்தார்களா? முன்கூட்டியே சமூக விரோதிகளை அடையாளம் கண்டிருக்க வேண்டியதுதானே? மக்கள் அங்கு தன்னெழுச்சியாக போராடினர். மாணவர்கள், பெண்கள் என அத்தனை பேரும் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடிய போராட்டம் அது.

காவல்துறையை பற்றி தெரியாது
ஒருத்தர் சொல்கிறார், காவல்துறையை தாக்கியதால்தான் சுட்டார்கள், சுட்டார்கள் என்று (ரஜினி போலவே கையை நீட்டி சைகை செய்தார்). காவல்துறையை பற்றியெல்லாம் இவர்களுக்கு தெரியாது (சிரித்தபடியே). காவல்துறையில் எத்தனை அதிகாரிகள் நடுநிலையாக இருக்கிறார்கள்? கோவையில் எங்கள் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி வந்தவர்களை போலீஸ் பிடித்து அடிக்கிறது. புக் செய்த மண்டபத்தை கேன்சல் செய்யுமாறு போலீஸ் சென்று மிரட்டுகிறது. இதுதான் போலீசார் செய்யும் செயல். காவல்துறையில் அத்தனை பேரும் உத்தமர்களா, காந்தியின் பேரன்களா? குட்கான்னா யார் நியாபகம் வருகிறது, காக்கி சட்டைதான் நியாபகத்திற்கு வருகிறது. எல்லா துறையிலும் நயவஞ்சகர்கள் ஊடுருவி விட்டார்கள்.

காந்தியை குறை சொல்ல முடியுமா
போராட்டங்கள் நடந்தால் சுடுகாடு ஆகிவிடும் என்கிறார்கள். காந்தி அகிம்சை வழியில் போராட்டம் நடத்திதான் சுதந்திரம் வாங்கி தந்தார். அப்போது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. அதற்காக காந்தியை குற்றம் சொல்வீர்களா, அப்போது கிழக்கிந்திய கம்பெனிக்காரன் சுட்டான். இப்போது நமது போலீசே யாருடைய உத்தரவின்பேரிலோ சுட்டுள்ளார்கள், அதுதானே உண்மை. 17 வயது பொண்ணு யாரு? நான் ஒரு நடிகரா போகிறேன், மக்கள் என்னை பார்த்து மகிழ்வார்கள் என்றார். அவரை நடிகராத்தான் மக்கள் பார்க்கிறார்கள். கட்சி ஆரம்பித்தால்தானே தெரியும். பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று பார்த்திருந்தால் உண்மை தெரியும்.

சினிமா சூட்டிங் இல்லை
தமிழிசையின் குரலாகவும், தமிழக அரசின் குரலாகவும்தான் அவர் பேசியுள்ளார். இது என்ன சினிமா சூட்டிங்கா, எழுதி கொடுத்ததை பேசுவதற்கு? அவர் பேட்டி கொடுத்த வீடியோவை பார்த்தேன். என்ன கோவம்? இதில் தியானம் செய்கிறாராம். 68 வயதாகிறது, தியானம் எல்லாம் ஆன்மாவுக்கு பண்ணனும். என்னை மடக்கத்தான் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டுள்ளீர்கள். நான் என்றாவது கோவப்பட்டேனா? எந்த ஒரு மனிதனின் சுயரூபம் எப்படியும் வெளிப்பட்டுவிடும். 3 மாதம், 6 மாதங்களில் யாராக இருந்தாலும் உண்மை வெளியாகிவிடும்.

சூட்டிங்கில் இருந்தாரா?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். ஒரு வீடியோ வெளியானதே அதை அவர் பார்க்கவில்லையா. அப்போது அமெரிக்காவில் இருந்தாரா, சூட்டிங்கில் இருந்தாரா? ஆட்டோ, பைக்கிற்கு காவல்துறை உடையில் இருந்தவர்களே தீ வைத்த வீடியோ வந்ததே, அதற்கு இதுவரை காவல்துறை மறுப்பே தெரிவிக்கவில்லையே. காந்தியே வந்து காக்கி சட்டை போட்டது போல இவர் பேசுகிறார். சினிமாவில் வேண்டுமானால் அதெல்லாம் நடக்கலாம். எல்லா துறையிலும் கறுப்பு ஆடுகள் உள்ளன. காவல்துறை மக்களை காக்க வேண்டிய துறை, அப்படித்தான் உள்ளதா? 100 நாள் போராட்டம் நடத்திய மக்கள் பிரச்சினையை கவனிக்காத மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நிர்வாகத்தின் கையாலாகத்தனம்தான் இந்த சம்பவத்திற்கு காரணமே தவிர மக்கள் கிடையாது. இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications