முதல்வரின் தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் கொடுத்தால் அவர்களுக்குத் தான் ஆபத்து... தினகரன் எச்சரிக்கை
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதாக கொண்டு வந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் கொடுத்தால் கையெழுத்து போட்ட எம்பி, எம்எல்ஏக்களுக்கு ஆபத்தாகிவிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தால் அது அவர்களின் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்று தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது : அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம். கட்சியின் வளர்ச்சிக்காக துணிச்சலான முடிவுகளை எடுப்பேன். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் சுயநலம் காரணமாகவோ பயம் காரணமாகவோ இப்டிப செயல்படுகின்றனர்.
கட்சியை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லக் கூடிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. சரியான தீர்க்கமான நடவடிக்கையை நிச்சயம் எந்த பயமுமின்றி செய்வேன். 23வயது முதல் கட்சியில் இருக்கிறேன், இடையில் சில காலங்கள் மட்டுமே கட்சியில் இல்லை. இயக்கத்தின் நன்மை கருதி எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயார்.
முதல்வர் பழனிச்சாமி கொண்டு வந்துள்ள தீர்மானமே செல்லாது, அவர்களின் அந்தத் தீர்மானம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டால் அது மோசடி ஆவணம் என்று தெரிய வந்துவிடும்.
யாரெல்லாம் கையெழுத்து போட்டுள்ளார்களோ அவர்கள் வகிக்கும் எம்எல்ஏ, எம்பி பதவிக்கு ஆபத்தாக முடிந்துவிடும். யாரோ சிலர் அந்த நகலை எடுத்து தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதாக எனக்கும் தகவல்கள் வருகின்றன அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கும் தெரியவில்லை என்று தினகரன் கூறியுள்ளார்.