வீடியோவை ஏன் வெளியிட்டோம்?... உண்மையை போட்டு உடைத்த சி.ஆர். சரஸ்வதி!
மக்கள் மத்தியில் உண்மையை உணர்த்துவதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக டிடிவி. தினகரன் தரப்பை சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதா மரணம் குறித்தே முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வந்ததாலேயே மக்கள் மத்தியில் உண்மையை உணர்த்துவதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக டிடிவி. தினகரன் தரப்பை சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி வீடியோ வெளியிடப்பட்டது குறித்து கருத்து கூறுகையில் : ஓராண்டுக்கு முன்னரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும் இதே சர்ச்சை தான் எழுந்திருக்கும். சசிகலா பற்றி பலரும் அவதூறாக பேசிய போதே இந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அப்போது அவர் மறுத்துவிட்டார், யாரிடமும் ஜெயலிலதாவை இந்த கோலத்தில் காட்ட விரும்பவில்லை என்று சசிகலா கூறி இருந்தார்.

விசாரணைக் கமிஷனிடம் இந்த ஆதாரங்களை நாங்கள் கொடுக்கத் தான் போகிறோம். கடந்த 15 நாட்களாகவே தேர்தல் களத்தில் ஆளும் கட்சியினர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டு வாக்கு சேகரிக்கவில்லை. தொடர்ந்து மக்கள் மத்தியில் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களையே விதைத்து வந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பும் அனைவருமே அன்று மருத்துவமனையில் இருந்தவர்கள் தான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களுக்கு தெளிவை கொடுக்கவுமே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம்.
75 நாட்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்து பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. லண்டனில், சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வீடியோ உண்மையான வீடியோ, இதை நாங்கள் நீதிமன்றத்திலும் கொடுப்போம். சிபிஐ விசாரணை வைத்தால் கூட எங்களுக்கு சவுகரியமாகத் தான் இருக்கும் என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications