டிடிவி தினகரனுக்கு ஜாமீன்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆதரவாளர்கள்
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிறையில் உள்ள டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் மூலம் லஞ்சம் தர முயன்றதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினகரனுக்கு உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைதாகினார்.

இதையடுத்து டெல்லி திஹார் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதங்களும் முடிந்து விட்ட நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பூனம் சவுத்ரி, டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா இருவருக்கும் ஜாமீன் அளிப்பதாக கூறினார். இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த செய்தி அறிந்த அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதேபோல் தஞ்சை, தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications