தினகரன் என்ன தேசதுரோக குற்றத்தையா செய்துவிட்டார்? வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் திருநாவுக்கரசர்!
தினகரன் தேச விரோத செயலையோ, கடுமையான குற்றங்களையோ செய்துவிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் தேச விரோத செயலையோ, கடுமையான குற்றங்களையோ செய்துவிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை மீட்க நாட்டின் உயரிய அமைப்பான தேர்தல் ஆணையத்துகெகெ லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இது பாஜகவின் சூழ்ச்சி என்று எதிர்க்கட்சிகள் கூறினாலும் கைது நடவடிக்கையை அனைவரும் வரவேற்றுள்ளனர்..
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் பலமில்லாத ஒரு அணியை பலப்படுத்துவதற்காக பாஜக, தினகரனின் கைது நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
தினகரன் தேசவிரோத செயலையோ, கடுமையான குற்றங்களையோ செய்துவிடவில்லை. இவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாதது. அந்த பணத்தை வாங்க தேர்தல் ஆணையத்தில் முயற்சி செய்தவர்களும் குற்றவாளிகளே. எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் அல்லது பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் இணையும் மனநிலையில் ரஜினிகாந்த் இல்லை. அதேபோல் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ரஜினிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
திருநாவுக்கரசரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் திமுகவுக்கு எதிராக செயல்படுகிறார் என்று திமுகவில் கருத்து நிலவி வருகிறது. மேலும் அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்குவது குறித்தும் கட்சித் தலைமையிடம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தான் அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என்று தெரிவித்திருந்த திருநாவுக்கரசர், தினகரனுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.