தொப்பிக்காரர்கள் தலையில் பணமூட்டையை சுமந்து செல்கிறார்கள்.. நாம் பாசத்தை சுமந்து செல்கிறோம்: ஓபிஎஸ்
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பிச்சின்னத்தில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சியினர் தலையில் பண மூட்டையை சுமந்து செல்வதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பிச்சின்னத்தில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சியினர் தலையில் பண மூட்டையை சுமந்து செல்வதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் இந்த பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்கேநகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஒரு குடும்பத்தின் பிடியில், கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக அதிமுகவை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
இரும்புக்கோட்டையாக மாற்றினார்
அதே கொள்கையோடு ஜெயலலிதா ஒன்றரை கோடி தூய தொண்டர்களுடன் எந்த கொம்பாதி, கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக மாற்றி காட்டினார்.ஆனால், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் சென்றிருக்கிறது.
ஜெயலலிதா யாரை விரட்டினாரோ? அவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தொப்பிக்காரர்கள் தலையில் பணமூட்டை
தொப்பிக்காரர்கள் தலையில் பணமூட்டையை சுமந்து செல்கிறார்கள். நாம், பாசத்தை தலையில் சுமந்து செல்கிறோம்.பணமா? பாசமா? என்கிற போட்டியில் பாசம்தான் உறுதியாக வெற்றி பெறும்.
பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும்
ஜெயலலிதா மர்ம மரணத்தில் உள்ள சந்தேகங்கள் நாட்டு மக்களுக்கு தெரியும் வரை எங்களுடைய தர்ம யுத்தம் ஓயாது. விரைவில் இந்த பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும்.
நல்லாட்சி மீண்டும் மலரும்
ஜெயலலிதா விரும்பிய மக்களாட்சி தத்துவத்தின்படி அவருடைய நல்லாட்சி மீண்டும் மலரும். இவ்வாறு ஓபிஎஸ் தனது பிரச்சாரத்தின் போது பேசினார். அப்போது தேர்தல் மன்னன் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.