பழனிசாமியை பதவி ஆசை பிடித்து ஆட்டுகிறது.. பொங்கும் டிடிவி தினகரன்
பதவியாசையால் துரோக சிந்தனையில் உள்ள முதல்வர் பழனிசாமி எப்படி தமிழக மக்களுக்காக செயல்பட முடியும் என்று துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே அதிமுக பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகள் இணைந்த பின்னர் முதன்முறையாக உள்கட்சி பூசலுக்கான காரணம் என்னஎன்பதை வெளிப்படையாக கூறியுள்ளார் டிடிவி. தினகரன்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த போது தினகரன் கூறியதாவது:
பதவியாசை
பொதுச்செயலாளரால் முதல்வரான பழனிசாமிக்கு பதவியாசை பிடித்து ஆட்டுகிறது. துரோக சிந்தனையில் உள்ளவர் எப்படி தமிழக மக்களுக்காக செயல்பட முடியும். பொதுச்செயலாளர் நியமனமே செல்லாது என்று சொல்வதால் தான் எதிர்க்கிறோம்.
ஸ்லீப்பர் செல்கள்
இரட்டை இலையை முடக்கக் காரணமான ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் பதவி விலகினால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். எதிர் அணியில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர், சரியான நேரத்தில் வெளியே வருவார்கள்.
பொறுமை காக்கிறோம்
எடுத்த எடுப்பில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதற்காகவே பொறுமையாக காலம் கொடுத்து காத்திருக்கிறோம். பொறுத்தார் பூமியாள்வார், துரோகம் செய்பவர் ஆட்சியில் இருக்கக் கூடாது துரோக சிந்தனை இல்லாத ஒருவரே முதல்வராக இருக்க வேண்டும் அது தான் எங்களது விருப்பம்.
கட்சி எங்களிடம்தான்
கட்சி எங்களிடம் தான் உள்ளது, அது பொறுத்திருந்து தெரிய வரும். தற்போதைய நிலையில் கட்சியை பலப்படுத்திவிட்டேன். ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தற்போது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், என்று தினகரன் கூறினார்.