ஆர்.கே.நகருக்கு செல்ல மறுக்கும் எம்எல்ஏக்கள்... வைட்டமின் 'ப' வை மட்டுமே நம்பும் டிடிவி தினகரன்...
ஆர்.கே.நகரில் தொகுதிவாசிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பிரச்சாரத்திற்கு செல்ல தயங்குவதால் வைட்டமின் 'ப' மட்டுமே நம்பியுள்ளாராம் டிடிவி தினகரன்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்காக பிரச்சாரம் செய்ய அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனது வெற்றிக்காக அவர் பணத்தை மட்டுமே நம்பியிருக்கிறாராம்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு காலியான ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ஆம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நட்சத்திர பேச்சாளர்களும் தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

பலமுனை போட்டி நிலவும் ஆர்.கே நகரில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
டிடிவி தினகரனுக்காக அறிவிக்கப்பட்ட 152 பொறுப்பாளர்களைத் தவிர அறிவிக்கப்படாமல் பல பொறுப்பாளர்கள் பணியில் உள்ளனர். அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பணியில் இருந்தாலும் தளவாய் சுந்தரத்தையும், லட்சுமிபதி என்பரிடமும்தான் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாராம்.
122 எம்எம்ஏக்களும் தற்போது ஹாஸ்டலில் தங்கி இருக்கின்றனர். தொகுதில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் எந்த விபரத்தையும் தினகரனிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லையாம். சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முதல்வரிடமே பேசிவிடுவதால், தனக்கு எதிராக அணி சேர்க்கிறாரா முதல்வர் என்று கோபப்படுகிறாராம் டிடிவி தினகரன். தொகுதியில் உள்ள பொறுப்பாளர்களுக்கும், தினகரனுக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் தேர்தல் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எதிரொலிக்கும் அதிருப்தி
சசிகலாவின் மீதுள்ள அதிருப்தி தினகரன் செல்லும் இடமெல்லாம் எதிரொலிக்கத்தான் செய்கிறது. அவர் சசிகலாவின் படத்தை பிரசாரத்தில் தவிர்த்தாலும் அவரால் வெறுப்பு நெருப்பை சந்திக்காமல் இருக்க முடியவில்லை. தினகரன் எந்தப் பகுதிக்கு பிரசாரத்திற்குச் செல்கிறாரோ, அவர் செல்வதற்கு முன்பாகவே பொறுப்பாளர்கள் சிலர் அங்கு சென்று கள நிலவரத்தைப் பார்த்து வருகிறார்களாம். நீங்கள் வந்து செல்லலாம் எதுவும் பிரச்னை இல்லை என்று சொன்னதற்குப் பிறகுதான் அவர் அந்தப் பகுதிக்குச் செல்கிறாராம்.
முடங்கிய எம்எல்ஏக்கள்
இதேபோல டிடிவி தினகரனுக்காக பிரச்சாரம் செய்ய வந்த எம்எல்ஏக்கள் பலரும் தொகுதிவாசிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெம்பு இல்லாமல் ஹாஸ்டலில் தங்கியுள்ளனர். தினகரனுக்காக சொந்த பணத்தை ஏன் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் தெரிகிறது.
வைட்டமின் ப
களநிலவரம் டிடிவி தினகரனுக்கு கலவரமாகவே இருக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் வைட்டமின் 'ப' வை வாரி இறைத்து தேர்தலில் ஜெயித்து விடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம் டிடிவி தினகரன். ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்த ஆர்.கே. நகர் வாசிகள் டிடிவி தினகரனக்கு வாக்களிப்பார்களா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications