ஓபிஎஸும் தீபாவும் தகுதி என்பதை பயன்படுத்த கூட தகுதியற்றவர்கள்:சொல்கிறார் 'இன்னோவா' சம்பத்
ஓபிஎஸும் தீபாவும் தகுதி என்ற வார்த்தையை பயன்படுத்த கூட தகுதியற்றவர்கள் என அதிமுக (அம்மா) கட்சி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸும் தீபாவும் தகுதி என்ற வார்த்தையை பயன்படுத்த கூட தகுதியற்றவர்கள் என அதிமுக (அம்மா) கட்சி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.அதிமுகவுக்கு சரியான தலைமை டிடிவி தினகரன் தான் என்றும் நாஞ்சில் சம்பத் அடித்துக் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியிலான சுளீர்கேள்விகளுக்கும் நாஞ்சில் சம்பத் அசராமல் பதிலளித்தார்.
சரியான தலைமை தினகரன்தான்
கேள்வி-அதிமுகவுக்கு சரியான தலைமை யார்? என்ற கேள்விக்கு சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் தான் அதிமுகவுக்கு சரியான தலைமை என்றார். டிடிவி.தினகரனுக்குதான் அதிமுக தலைமையாக இருக்க தகுதியுள்ளது என்றவர், ஓபிஎஸும், தீபாவும் தகுதி என்ற வார்த்தையை கூட பயன்படுத்த தகுதியற்றவர்கள் என்றார்.
அப்போ இருந்தது இப்போ இல்லை
ஜெ.மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவின் மரணத்தில் ஆரம்பத்தில் மர்மம் இருப்பதாக கூறினேன். ஆனால் இப்போது எந்த சந்தேகமும் இல்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மமும் இல்லை என்றார்.
மருத்துவர்களை சந்தேகிப்பவன் மனநோயாளி
நாளுக்கு நாள் தெளிவு வரும். தெளிவு வந்ததால் ஜெயலலிதா மரணத்தில் இருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டதாக அவர் கூறினார். தலைச்சிறந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளனர். அவர்களை சந்தேகிக்க முடியாது. மருத்துவர்களை சந்தேகிப்பவன் மனநோயாளி என்றும் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்தார்.
சேர்ப்பதும் நீக்குவதும் அதிமுகவில் பொருட்டல்ல
தினகரன் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்தானே என்ற கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், கட்சியில் சேர்ப்பதும் நீக்குவதும் அதிமுகவில் ஒரு பொருட்டல்ல என்றார். இப்போதுள்ள இக்கட்டான காலக்கட்டத்தில் டிடிவி.தினகரன் தான் ஆர்கே.நகரில் போட்டியிட சரியான வேட்பாளர் என்றும் அவர் கூறினார்.
ஒபிஎஸ் இடைத்தரகர், தீபா களை
ஆர்கே.நகரில் தினகரனுக்கு போட்டி யார் என்ற கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், திமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி. இதில் ஓபிஎஸ் ஒரு இடைத்தரகர். தீபா ஒரு களை அவர்களை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.