சசிகலாவை பெங்களூரு சிறையில் நாளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்?
சசிகலாவை பெங்களூரு சிறையில் நாளை தினகரன் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த தினகரன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அன்றும் இன்றும்
சிறைக்குப் போகும்போது அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியில் இருந்து தாம் ஒதுங்கிக் கொள்வதாக கூறியிருந்தார் தினகரன். ஆனால் ஜாமீனில் வெளியே வந்த தினகரன், அதிமுகவை வழிநடத்தப் போவதாக கூறி வருகிறார்.
வலிமையான எடப்பாடி அண்ட்கோ
அத்துடன் முதல்வர் எடப்பாடி ஆதரவு கொங்கு கோஷ்டி தற்போது வலிமையாக உள்ளது. இந்த கோஷ்டி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் அதிமுக அரசு மீண்டும் ஒரு பஞ்சாயத்தை சந்திக்க இருக்கிறது.
சசிகலாவுடன் சந்திப்பு
இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலாவை நாளை தினகரன் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பதவிகளுக்கு ஆப்பு
இச்சந்திப்புகளைத் தொடர்ந்து தினகரன் எடுக்கப் போகும் முடிவுகளால் மீண்டும் அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. பல அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் தினகரன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.