பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் - கட்சியில் அதிரடி மாற்றம் வரலாம்?
டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசியுள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலாவை சந்திக்க இன்று தினகரன் பெங்களூரு சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசித்து வந்தனர்.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன். இதனையடுத்து அமைச்சர்கள் அனைவரும் கூடி ஆலோசித்து தினகரன், சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக கூறினர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா படம் அகற்றப்பட்டது. இதனையடுத்து சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் யாரும் சிறைக்கு செல்லவில்லை.

பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு
டெல்லி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான பிறகு கடந்த 10 தினங்களுக்கு முன்பு பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலா உடன் ஆலோசனை நடத்தினார் தினகரன். அப்போது 60 தினங்களுக்கு ஒதுங்கியிருக்கப் போவதாக கூறினார். இரு அணிகளும் இணையும் வரை பொறுமையாக இருப்பேன் என்றும் கூறினார். ஆனால் திடீரென்று பேச்சுவார்த்தை குழுவை கலைத்தார் ஓ.பன்னீர் செல்வம்.

பணபேர வீடியோ
இதனையடுத்து மறுநாளே எம்எல்ஏக்கள், பணம், தங்கம் பெற்றுக்கொண்டு சசிகலா அணிக்கு ஆதரவு கொடுத்து வருவதாக எம்எல்ஏ சரவணன் கூறியதாக வீடியோ ஒன்று ஆங்கில தொலைக்காட்சி சேனலில் வெளியானது. இது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலாவை சந்தித்த தினகரன்
பண பேர விவகாரம் குறித்த வீடியோ சட்டசபையிலும் புயலை கிளப்பியது. இந்தநிலையில் இன்று மீண்டும் சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று சந்தித்து பேசியுள்ளார் தினகரன். திகார் சிறையில் இருந்து தினகரன் வந்த பின்னர் சசிகலாவை சந்திப்பது இது 2வது முறையாகும்.

தினகரன் வலியுறுத்தல்
அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு டிடிவி தினகரன் என சசிகலாவிடம் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதிரடி மாற்றம்
அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணி உள்ளது. ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உருவாகியுள்ளனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். ஈபிஎஸ் அமைச்சரவையில் இருந்து சிலர் நீக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தினகரன் பெங்களூரு சென்று திரும்பிய பின்னர் அதிமுகவில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications