திமுகவுடன் இணைந்து ஆட்சியா? சு.சுவாமி கருத்துக்கு தினகரன் மழுப்பலான பதில்
திமுகவுடன் இணைந்து டிடிவி தினகரன் அணி ஆட்சி அமைக்கும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு தினகரன் மழுப்பலாகவே பதில் அளித்தார்.
தேனி: திமுகவுடன் இணைந்து டிடிவி தினகரன் அணியினர் இன்னும் ஓரிரு நாள்களில் கூட்டணி ஆட்சியை அமைப்பர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு தினகரன் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்த சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுகவும் , தினகரன் அணியினரும் சேர்ந்து கூட்டணி ஆட்சியை ஓரிரு நாள்களில் ஏற்படுத்துவர் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேனியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கட்சிக்கு எது சரியோ அதை செய்ய சசிகலா எனக்கு அதிகாரம் தந்துள்ளார். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார் எச். ராஜா.
சுப்பிரமணி சுவாமி நான் மதிக்கிற தலைவர்களில் ஒருவர். மிகவும் துணிச்சலாக கருத்துகளை தெரிவிப்பவர். தனக்கு சரி எனப்படுவதில் உறுதியுடன் இருப்பவர்.
தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு சு.சுவாமி கருத்து தெரிவித்திருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு நான் ஜோதிடரோ அல்லது அரசியல் நிபுணரோ அல்ல. அது அவரது சொந்த கருத்து என்றார் தினகரன்.