டார்கெட் பத்து எம்.எல்.ஏக்கள்...! - புரட்சிப் பயணத்தில் தினகரனின் 'திடீர்' வியூகம்
தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் சசிகலா. அ.தி.மு.கவுக்குள் சசிகலா குடும்பத்தினர் நடத்தும் ஆட்டத்தால் கதிகலங்கிப் போய் உள்ளனர் அமைச்சர்கள்.
சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்குக்குப் பிறகு ஆட்சி ஆட்டம் கண்டு விடும். விரைவில் பத்து எம்.எல்.ஏக்கள் நம்முடைய அணிக்கு வர இருக்கின்றனர் எனப் பேசியிருக்கிறார் தினகரன்.
தஞ்சை வடக்குப் பகுதியில் இன்று புரட்சிப் பயணம் நடத்தி வருகிறார் தினகரன். பயணத்தின் முடிவில் ஆட்சிக்கான கெடுவை அறிவிப்பாரா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்தார் தினகரன். இப்படியொரு முயற்சி நடந்தால் அ.தி.மு.கவை நாம் சொந்தம் கொண்டாட முடியாது. தகுதி நீக்க வழக்கில் நாம் வெற்றி பெற்றாலும், கட்சி இருந்தால்தான் அனைவரையும் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.தனிக்கட்சி என இனியும் பேச வேண்டாம்' எனக் குடும்ப உறுப்பினர்கள் தடைபோட்டனர்.
குக்கர் சின்னம்
நம்மை நம்பி வந்த ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றால்தான் நம்முடைய வெற்றியைப் பற்றி நீதிமன்றத்திலும் தெரிவிக்க முடியும். மீண்டும் குக்கர் சின்னம் கோரினாலும், மாநில தேர்தல் ஆணையத்தின் மூலமாக ஆட்சியில் உள்ளவர்கள் தடை போடுவார்கள் என தினகரன் கூறியுள்ளார்.
தனிக்கட்சி அவசியம்
அரசு இயந்திரத்தை வைத்து பெருமளவில் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆர்.கே.நகர் வெற்றியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல தனிக்கட்சி அவசியம் என்னும் தினகரன் எடுத்துக் கூறினாலும், திவாகரன் உள்ளிட்டவர்கள் அதை ஏற்கவில்லையாம்.
கோபத்தில் சசிகலா
இதனையடுத்து, சசிகலா கவனத்துக்கும் தினகரனின் செயல்பாடுகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா. இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் மன்னார்குடி கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர், " தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார் தினகரன் என்றார்.
தினகரனுக்கு எதிராக திவாகரன்
அவருக்கு ஆதரவாக திவாகரன் தரப்பினர் பேசினாலும், சசிகலாவையே ஓரம்கட்டுவதுதான் தினகரனின் திட்டம். 'மக்கள் தன்னுடைய தலைமையை விரும்புகிறார்கள்' என்பதை உறுதியாக நம்புகிறார். இளவரசி குடும்பத்துக்கு எதிராக நடராஜனும் திவாகரன் தரப்பினரும் பேசுவதை பெரிதும் ரசிக்கிறார். அதேநேரம், தினகரனின் சமீபத்திய செயல்பாடுகளை அறிந்த பின்னர்தான், அ.தி.மு.க அமைச்சர்களுக்கு சில விஷயங்களைச் சொல்ல முடிவெடுத்தார் திவாகரன்.
திவாகரன் கட்டுப்பாட்டில் கட்சி
ஆட்சியை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். இந்த ஆட்சிக்கு எங்களால் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாது. அதேநேரம், கட்சியின் லகானை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். ஐந்து ஆண்டுகள் முடியும் வரையில் எங்களால் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாது. சசிகலாவிடமும் இதுகுறித்து தெரியப்படுத்துகிறோம். இந்த முயற்சிக்கு அவருடைய ஆசிர்வாதமும் உண்டு என விவரித்துள்ளனர்.
ரசிக்காத ஜெயக்குமார்
திவாகரன் தரப்பினரின் தூது முயற்சியை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் இப்படியொரு தகவல் வெளியாவதற்கு எதிராகக் கொந்தளித்தார். கட்சியை திவாகரன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான திரைமறைவு வேலைகள் வேகமெடுத்துள்ளன என்கிறார்.
10 எம்எல்ஏக்கள்
திவாகரன் நடவடிக்கைகளுக்கு எதிராக தினகரனும் சில காய் நகர்த்தல்களை செய்து வருகிறார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும், மேலும் சில எம்.எல்.ஏக்களை வளைக்கும் முடிவில் இருக்கிறார். மொத்தம் 10 எம்.எல்.ஏக்களை இழுப்பதற்கான வேலைகளைத் துரிதப்படுத்தி வருகிறார் தினகரன். அவருடைய முயற்சிக்கு 6 எம்.எல்.ஏக்கள் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
தினகரன் பேச்சு
பத்து எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் வந்துவிட்டால், ஆட்சிக்கான ஆதரவு என்பது மிகவும் குறைந்துவிடும். 105 எம்.எல்.ஏக்கள்தான் ஆளும்கட்சி பக்கம் இருப்பார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை உணர்ந்துதான், 'விரைவில் தேர்தல் வரும்' எனப் பேசிக் கொண்டு இருக்கிறார் தினகரன்.
அதிருப்தியில் எம்எல்ஏக்கள்
ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள இந்த எம்.எல்.ஏக்களின் சிலர், முதல்வரின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் இந்த பத்து எம்.எல்.ஏக்களை வளைத்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார் தினகரன் என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.